விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் கோடி கணக்கில் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கும் நிலையில், சிறு குறு தொழில் முனைவோர் ஜிஎஸ்டி அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாக காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. வரும் 19-ஆம் தேதி (19.04.2024) தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும் நிலையில், ஜூன் 1-ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக 19-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்நிலையில், மாலையுடன் பரப்புரை முடிவதால் முதற்கட்டமாக தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியில் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட வாக்குவேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் விமர்சன பரப்புரை உச்சத்தை எட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாக விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், பாஜக வேட்பாளர் நடிகர் ராதிகா சரத்குமார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக முன்வைத்துள்ளார். ராதிகா சரத்குமார் தாக்கல் செய்த வேட்புமனு பிரமாண பத்திரத்தில் சுமார் 6 கோடியே 54 லட்சம் ரூபாய்க்கு மேலும், அவரது கணவர் சரத்குமார் 8 கோடியே 48 லட்சம் ரூபாய்க்கு மேலும் வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் விமர்சித்துள்ளார்.