கேரள மாநிலம் கொல்லம் தொகுதி பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்ணில் தாக்கிய சம்பவத்தில் பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். தன்னை சிபிஎம் தொண்டர்கள் தான் தாக்கியதாக அவர் போலீசில் புகார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் கொல்லம் தொகுதியில் பாஜக சார்பில் பிரபல மலையாள சினிமா நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். கடந்த 20ம் தேதி குண்டரா பகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை சுற்றிலும் ஏராளமானவர்கள் நின்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கிருஷ்ணகுமாரின் கண்ணில் யாரோ ஒருவர் தாக்கினார்.
இதில் அவரது வலது கண்ணில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் குண்டரா போலீசில் புகார் செய்தார். அதில் சிபிஎம் தொண்டர்கள் தான் தன்னை தாக்கியதாக குறிப்பிட்டிருந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆனால், விசாரணையில் கிருஷ்ணகுமாரை தாக்கியது குண்டரா பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகரான சனல்(50) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் சனல், தன்னிடம் இருந்த வாகனத்தின் சாவியால் கிருஷ்ணகுமாரை தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.