நடிகர் அல்லு அர்ஜுன் தனது சம்பளத்தை ரூ.150 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்தியா முழுவதும் ஒரு பிராண்டாக மாறியது புஷ்பா திரைப்படம். இதனிடையே இப்படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் பாகம் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா-2 வை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் அல்லு அர்ஜுன் முந்தைய படத்துக்கு வாங்கிய சம்பளத்தில் இருந்து 30 சதவிகிதத்தை உயர்த்தி தற்போது ரூ. 150 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.