இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஹாமில்டன் அரங்கை கைப்பற்றிய மாணவர்களை காவல்துறை கைது செய்தனர். இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இப்போரில் இதுவரை 34,356 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 77,368க்கும் மேற்பட்டோட் காயமடைந்துள்ளனர். இதுவரை 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தியது. சமீபத்தில் காஸா பகுதியின் 2வது மிகப்பெரிய நகரமான கான் யூனிஸை விட்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேறியதாக தகவல் வெளியானது. ஆனாலும் போரால் புலம் பெயர்ந்த பாலஸ்தீனர்களின் கடைசி புகலிடமாகத் திகழும் ராஃபாவுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு வசதியாகத்தான் கான்யூனிஸ் நகரிலிருந்து படையினர் வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், லிபோர்னியா உள்ளிட்ட நகரங்களில் உள்ள கொலம்பியா, ஹார்வர்ட், யேல், ஐவி லீக் ஸ்கூல், தெற்கு கலிபோர்னியா, டெக்சாஸ் பல்கலைக்கழகங்களில் கடந்த இரண்டு வாரங்களாக காஸா மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இருப்பினும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஹாமில்டன் அரங்குக்கு நேற்று இரவு வந்த காவல்துறையினர், இரண்டாவது மாடியின் ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்து மாணவர்களை கைது செய்தனர். காவலர்கள், மாணவர்களின் கைகளை கட்டி ஒவ்வொருவராக மாடியில் இருந்து கீழே இறக்கி வாகனங்கள் மூலம் அழைத்துச் சென்றனர். மாணவர்கள் வெளியேறும்போது “பாலஸ்தீனத்தை விடுவியுங்கள்” என்று முழக்கங்களை எழுப்பினர். இதனைத்யடுத்து, கொலம்பியா பல்கலைக்கழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா மே 17 அன்று நடைபெற உள்ள நிலையில், அதுவரை பல்கலைக்கழகத்துக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
![பாலஸ்தீன ஆதரவு போராட்டம் - கொலம்பியா பல்கலை. அரங்கத்தை கைப்பற்றிய மாணவர்கள் கைது!](https://uthayannews.ca/wp-content/uploads/2024/05/Palathinam-poratam-Kolmbia-college-students-arest.jpg)