பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 72.
எண்பதுகளில் பிறந்த மற்றும் வாழ்ந்த பெரும்பாலான திரை இசை ரசிகர்களுக்கும், பரிச்சயமான பெயர் உமா ரமணன். இவர் கடந்த 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ என்ற பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ’ஆனந்த ராகம் கேட்கும் காலம்’ உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் பலரின் கவத்தை பெற்று வருகிறது. இவர் மூடுபனி, கர்ஜனை என இளையராஜாவின் இசையில் தொடர்ந்து பல பாடல்களை பாடியுள்ளார். மேலும், எம்.எஸ். விஸ்வநாதன், டி.ராஜேந்தர், தேவா, சிற்பி, வித்யாசாகர், மணி ஷர்மா உள்ளிட்ட பல இசைமைப்பாளர்களின் இசையில் உமா ரமணன் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். இறுதியாக அவர் விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ’கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு’ என்ற பாடலை பாடினார். திரை இசை பாடல்கள் மட்டுமின்றி, ஏராளமான மேடைக் கச்சேரிகளிலும் அவர் பங்கேற்று வந்தார். அவரது கணவர் ஏ.வி.ரமணன், தொலைக்காட்சிகளில் வர்ணனையாளராகவும், நடிகராகவும், பாடகராகவும் நன்கு அறியப்பட்டவர். சென்னை அடையாறு பகுதியில் இவர்கள் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக உமா ரமணன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். அவரது மறைவிற்கு இசையமைப்பாளர்கள், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.