கர்நாடக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏயு மான ஹெச்.டிரேவண்ணா கைது செய்யப்பட்டார். பெண்ணைக் கடத்தியதாக கே.ஆர் நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவரை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கைது செய்தனர்.
கடத்தப்பட்ட பெண்ணின் மகன் தனது தாய் கடத்தப்பட்டதாக ஹெச்.டி.ரேவண்ணா மற்றும் அவரது உதவியாளர் சதீஸ் மீது புகார் அளித்திருந்தார். அந்தப் பெண் ரேவண்ணாவில் வீட்டில் சுமார் ஐந்து ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் வேலையில் இருந்து நின்றுவிட்டார்.
இந்த நிலையில், கடந்த ஏப்.26-ம் தேதி ரேவண்ணாவின் நெருங்கிய உதவியாளர் சதீஸ் தனது தாயாரை அழைத்துச் சென்றதாகவும், அதேநாளில் அவர் வந்து வீட்டுக்கு வந்து விட்டார். ஆனால் ரேவண்ணாவின் ஆள் மீண்டும் ஏப்.29-ல் அழைத்துச் சென்றார். அதன்பிறகு தனது தாயார் வீடு வந்து சேரவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். இதனிடையே, கடத்தப்பட்ட பெண்ணை சிறப்பு புலனாய்வு குழுவினர் கண்டுபிடித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்த பெண் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுவதில் இருந்து இடைக்காலத் தடை கோரி ரேவண்ணா தாக்கல் செய்திருந்த மனுவை உள்ளூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, ரேவண்ணாவின் வீட்டில் வைத்து அவரை எஸ்ஐடி போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக, ரேவண்ணா மீது பிரஜ்வால் ரேவண்ணாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்ணைக் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் வெள்ளிக்கிழமை மைசூரு கே.ஆர். நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் மீது பதியப்பட்ட இரண்டாவது வழக்கு இது. இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 376(2)(N), 506, 354A(1), 354(B), 354(c) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சிபிஐ, ‘ப்ளூ கார்னர் நோட்டீஸ்’ விரைவில் பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக, அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு புகார்களை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.