உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது தம்பி மகனான ஆகாஷ் ஆனந்த் என்பவரை தனது அரசியல் வாரிசாகவும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் அறிவித்திருந்தார். இதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சியின் பல்வேறு நிகழ்வுகளிலும் ஆகாஷ் ஆனந்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், ஆகாஷ் ஆனந்த் பல்வேறு பொதுக்கூட்டங்களிலும், பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்று கொள்வதாக மாயாவதி எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆகாஷ் ஆனந்துக்கு அனுபவம் போதாது என்பதால் அவர் தற்காலிகமாக கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.