கேரளா அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த டாக்டரை நகச்சுத்து சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் ஜெரோமிக் ஜார்ஜ் வீட்டுக்கு வரவழைத்து பல மணி நேரம் காத்திருக்க வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் ஜெரோமிக் ஜார்ஜ் கடந்த வருடம் பொறுப்பேற்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட மருத்துவ அதிகாரியை போனில் அழைத்து தனக்கு நகச்சுத்து இருப்பதாகவும், அரசு பொது மருத்துவமனையில் உள்ள ஒரு டாக்டரை உடனடியாக தன்னுடைய வீட்டுக்கு அனுப்புமாறும் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருப்பதாகவும், உடனே டாக்டரை அனுப்புவது சிரமம் என்றும் மாவட்ட மருத்துவ அதிகாரி கூறியுள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்த மாவட்ட ஆட்சியர் ஜெரோமிக் ஜார்ஜ் உடனே டாக்டரை அனுப்புமாறு கூறினார். இதையடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த ஒரு டாக்டர் மாவட்ட ஆட்சியரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால், வீட்டுக்கு கிகிச்சை அளிக்க வந்த டாக்டரை ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருக்க வைத்த பிறகே மாவட்ட ஆட்சியர் சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் டாக்டர்களிடையே கடும் கொந்தழிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து இது குறித்து கேரள அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர், துறை செயலாளர் ஆகியோரிடம் புகார் செய்து உள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் வரும் காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கேரள சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் முகம்மது ஹனீஷ் கூறினார். திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் – ஜெரோமிக் ஜார்ஜ் கடந்த வருடத்தின் சிறந்த மாவட்ட ஆட்சியர் என்று வருவாய்த்துறையின் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.