மக்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் ஈடுபடுவார்கள் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் கூறியுள்ளார்.
உ.பி.யில் ‛இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும். மாநிலத்தில் ‛இந்தியா’ கூட்டணி சூறாவளி வரப்போகிறது என்பதை எழுதித் தருகிறேன். நாட்டிலும், உ.பி.யிலும் பா.ஜ. படுதோல்வி அடையப் போகிறது. நாட்டிற்கான பாதையை உ.பி. வடிவமைத்துள்ளது. மாநிலத்திலும், தேசிய அளவிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என உ.பி. முடிவு செய்துள்ளனர். அதற்கான முடிவை மக்கள் எடுத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் அதானி, அம்பானியின் பெயரை பிரதமர் மோடி உச்சரித்தது இல்லை. 10 ஆண்டுகளில் ஆயிரகணக்கான கூட்டங்களில் அவர் பேசியிருந்தாலும் 2 பேரது பெயரை பயன்படுத்தியது கிடையாது. ஒருவருக்கு பயம் வரும் போது தன்னை காப்பவர்களின் பெயர்கள் தான் அவரின் நினைவில் வரும். இதனால், மோடி அவரது நண்பர்களின் பெயரை பயன்படுத்த துவங்கி உள்ளார். ‛‛என்னை காப்பாற்றுங்கள். இந்தியா கூட்டணி என்னை ஓரங்கட்டி உள்ளது. நான் தோல்வி அடைகிறேன். அம்பானி – அதானி காப்பாற்றுங்கள் ‘என்கிறார். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் உங்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுவர்கள். அடுத்த 15 நாட்களுக்கு இது நடக்கும். ஆனால் யாரும் கவனத்தை சிதற விட வேண்டாம். இவ்வாறு ராகுல் பேசினார்.