கேரள மாநிலம் கண்ணூரில் இன்று (மே 13) அதிகாலை சுமார்3 மணியளவில் நடுரோட்டில் ஐஸ்கிரீம் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கேரள மாநிலம் கண்ணூர் சக்கரக்கல் பகுதியில் கடந்த சில தினங்களாக சிபிஎம், பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இதனால் இந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று (மே 13) அதிகாலை சுமார் 3 மணியளவில் போலீஸ் ரோந்து பணியின்போது நடுரோட்டில் பயங்கர சத்தத்துடன் 2 குண்டுகள் வெடித்தன . இந்த சம்பவத்தில் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் வெடித்தது ஐஸ்கிரீம் குண்டு என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் வழக்கு பதிவு செய்த சக்கரக்கல் போலீசார் குண்டு வீசியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.