கேரள மாநிலம் மலப்புரம் அருகே பொன்னானி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகின் மீது கப்பல் மோதி 2 மீனவர்கள் பரிதாபமாக இறந்தனர். கடலில் விழுந்த 4 பேர் மீட்கப்பட்டனர்.
கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள பொன்னானியை சேர்ந்த அப்துல் சலாம் மற்றும் கபூர் ஆகியோர் உள்பட 6 மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக நைனார் என்பவரின் இஸ்லாஹி என்ற படகில் சென்றனர். அதிகாலை 1 மணியளவில் பொன்னானியிலிருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு கப்பல் மீன்பிடி படகின் மீது மோதியது. இதில் படகு இரண்டாக பிளந்து 6 பேரும் கடலில் விழுந்தனர். இது குறித்து அறிந்ததும் கப்பலில் இருந்தவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் மீட்கப்பட்டனர். அப்போது அப்துல் சலாம் மற்றும் கபூர் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல்கள் பின்னர் கரைக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த விபத்து குறித்து கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.