நடிகை நயன்தாரா-விக்னேஷ்சிவன் தம்பதியினர் திருமணத்திற்கு பிறகு குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. இதன் பிறகு குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகை நயன்தாரா-விக்னேஷ்சிவன் தம்பதியினர் குமரி மாவட்டம் வந்தனர். சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த நயன்தாரா தம்பதியினரை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் வரவேற்றார். இதைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா தம்பதியினர் கோவிலில் சென்று தரிசனம் செய்தனர். அங்குள்ள ஆஞ்ச நேயரையும் வழிபட்டனர். பின்னர் நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு வந்தனர். நாகராஜா கோவிலில் பயபக்தியுடன் நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிக்கு சென்ற நடிகை நயன்தாரா நெற்றியில் திருநாமம் இட்டு அய்யா வைகுண்டரை வழிபட்டார். விக்னேஷ்சிவன் தலையில் தலைப்பாகையுடன் சாமி தரிசனம் செய்தார்.