கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மின் கம்பத்தில் ஆம்புலன்ஸ் மோதி தீ பிடித்து எரிந்ததில் நோயாளி கருகி இறந்தார். ஆம்புலன்சில் இருந்த 3 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நாதாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா(58) உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள மலபார் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக இன்று (மே 14) அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் அவரை ஆம்புலன்சில் கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆம்புலன்சில் டிரைவர் உள்பட 3 ஊழியர்களும் இருந்தனர். தனியார் மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்கம்பத்தின் மீது ஆம்புலன்ஸ் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மீது மோதி தீ பிடித்தது. மோதிய வேகத்தில் ஆம்புலன்சில் இருந்த டிரைவர் உள்பட 3 ஊழியர்களும் தூக்கி வீசப்பட்டனர்.
சுலோச்சனா ஆம்புலன்சில் சிக்கி கருகி இறந்தார். விபத்து குறித்து அறிந்ததும் போலீசார் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.