நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 1996 ஆம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் – ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவருக்கு சொந்தமான நிலத்தை நடிகர் கவுண்டமணி வாங்கினார். அதை ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து 22,700 சதுர அடி பரப்பிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டுமென ஒப்பந்தம் செய்துள்ளார். கட்டுமான பணிகளுக்காகவும், ஒப்பந்ததாரர் கட்டணமாகவும் ரூ. 3.58 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. 1996ம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை ரூ.1.4 கோடி செலுத்தி உள்ளார். இந்நிலையில், 2003 ஆம் ஆண்டு வரை கட்டுமான பணிகள் தொடங்கவில்லை எனக் கூறி, கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டுமான நிறுவனம் தரப்பில் கூறியதாவது: “3 தவணையாக முதலில் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் ரூ. 3 கோடி வரை தரப்படவில்லை. இந்த பாக்கி தொகையை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் உத்தரவு பிறப்பித்தது” என தெரிவித்தனர். இந்நிலையில், இரு தரப்பினரின் கருத்தை கேட்ட பிறகு, நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரிய உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.