கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவின் பிரதிநிதியாக நடிகை கியாரா அத்வானி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா, இன்று முதல் 25-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திரைப்பட விழாவின் பல்வேறு பிரிவுகளில் திரையிடப்படும் படங்கள் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டன. இதில் உலகின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்ட படங்கள் அடங்கும். இந்த விழாவில் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா ஷர்மா, சோனம் கபூர், சாரா அலி கான் மற்றும் கியாரா அத்வானி கலந்து கொள்ளவுள்ளனர். இந்திய நடிகை கியாரா அத்வானி, 2024-ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில், இந்தியப் பிரதிநிதியாக வுமன் இன் சினிமா காலா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சினிமா காலா விருந்தில் கெளரவ விருந்தினராக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த கியாரா அத்வானி கலந்து கொள்கிறார். கேன்ஸில் நிகழ்வின் தொகுப்பாளராக வேனிட்டி ஃபேர் நிறுவனம் செயல்படுகிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் சர்வதேச ஊக்குவிப்பு மற்றும் திரைப்படத் தயாரிப்பு குறித்து 4 குழு பேச்சுக்கள் இருக்கும். இவை மே 18, 2024இல் நடைபெறும். இந்த நான்கு குழுக்களில் ஒன்றில் கியாரா பங்கேற்க திட்டமிட்டுள்ளார். கியாராவுடன் நடிகர் அத்வா ஃபஹத், நடிகரும் பாடகருமான அசீல் ஓம்ரான், நடிகையும் மாடலுமான சல்மா அபு டெய்ஃப், நடிகர், மாடல் மற்றும் பாடகி சரோச்சா சங்கிம்ஹா மற்றும் இயக்குநரும் திரைக்கதை எழுத்தாளருமான ரமாதா துலயேசி ஆகியோர் ரெட் சீ சர்வதேச திரைப்பட விழா குழுவில் பங்கேற்கின்றனர்.