‘எந்த ஒரு பெண்ணுக்கு எங்கும் கொடுமை நடந்தால், நாங்கள் அந்த பெண்ணுக்கு ஆதரவாக நிற்போம்’ என நிருபர்கள் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த தேர்தல் பேரணியில், பிரியங்கா பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் பிரதமரை பொதுமக்கள் மத்தியில் பார்த்ததில்லை. இந்திரா பிரதமராக இருக்கும் போது, மக்களை நேரில் சந்திப்பார். ஆனால் பிரதமர் மோடி தனது வாகனத்தில் இருந்து பொதுமக்களை நோக்கி கை அசைப்பார். அவர் மேடையில் இருந்து கீழே வரமாட்டார். தற்போது, ஹிந்து, முஸ்லிம் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் அவர்கள் (பா.ஜ.,) அரசியல் செய்வது, இதை அடிப்படையாகக் கொண்டது. இவ்வாறு அவர் பேசினார். ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி., ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக கூறுவது, குறித்து நிருபர்கள் கேள்விக்கு, ‘எந்த ஒரு பெண்ணுக்கு எங்கும் கொடுமை நடந்தால், நாங்கள் அந்த பெண்ணுக்கு ஆதரவாக நிற்போம். நான் எப்போதும் பெண்களுக்கு ஆதரவாக நிற்கிறேன். அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி. இது குறித்து ஆம் ஆத்மி விவாதித்து முடிவெடுக்கும். பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், பெண்கள், விவசாயம் மற்றும் தொழிலாளர்கள் சார்ந்த பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி மற்றும் பா.ஜ. தலைவர்கள் பேச வேண்டும்’ என பதில் அளித்தார்.