அமைச்சர் மனைவி ஒருவரிடம் அவருடைய பெண் பிள்ளைகள் திருமணம் குறித்து கேட்டேன், முகத்தில் புன்னகை ஓடி உடைந்தது என்றும் பெண்கள் திருமணம் செய்து கொள்ள அஞ்சுகிறார்கள் என்று அவர் சொல்லியதை பரவலாகக் கேட்கிறேன் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்
”என் மதிப்புக்குரிய
அமைச்சர் ஒருவரின்
மனைவியிடம் கேட்டேன்
‘பெண் பிள்ளைகளுக்கு
எப்பொழுதம்மா திருமணம்?’
அவர் முகத்தில் – ஒரு
வாடிய புன்னைகை
ஓடி உடைந்தது
‘சமகாலத்தில்
திருமணமான சகபெண்களின்
வாழ்க்கையைப்
பார்த்துப் பார்த்துத்
திருமணம் என்றதும்
அஞ்சுகிறார்கள் அண்ணா’
என்றார்
இந்தக் குரலை
நான் பரவலாகக் கேட்கிறேன்
நிகழ்காலத் தலைமுறையின்
விழுமியச் சிக்கல் இது
ஒன்று
திருமண பந்தத்தின்
ஆதி நிபந்தனைகள்
உடைபட வேண்டும்
அல்லது
திருமணம் என்ற நிறுவனமே
உடைபடுவதை
ஒப்புக்கொள்ள வேண்டும்
ஒரு யுக மாற்றத்திற்குத்
தமிழர்கள் அல்ல அல்ல
மனிதர்கள் தங்கள் மனத்தைத்
தயாரித்துக்கொள்ள வேண்டும்
சமூகம் உடைந்துடைந்து
தனக்கு வசதியான
வடிவம் பெறும் –
கண்டங்களைப்போல”
எனப் பதிவிட்டுள்ளார்.