நகைச்சுவை நடிகர்களை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள் எனவும், நடிகர் சூரி அதற்கு முக்கிய உதாரணம் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இந்தப் படத்தை எதிர் நீச்சல், காக்கிச் சட்டை, கொடி, பட்டாசு ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். படத்தில் நடிகர் சூரியை தவிர்த்து, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த திரைப்படம் மே 31-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது: “சீமராஜா படப்பிடிப்பின் போது சூரி அண்ணனிடம் கதையின் நாயகனாக சில கதைகளை தேர்வு செய்து நடிக்க கூறினேன். ஆனால் அவர் தயங்கினார். பிறகு சிறிது காலம் கழித்து என்னை அழைத்த சூரி, இயக்குநர் வெற்றிமாறன் தன்னை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து படம் இயக்க இருப்பதாக தெரிவித்தார். நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பவர்களால் எமோஷன், சீரியஸ் வேடங்களில் எளிதாக நடித்துவிட முடியும். நகைச்சுவை நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். அதற்கு இன்னொரு உதாரணம் சூரி அண்ணன். நகைச்சுவை நடிகர்களால் சீரியஸ் கதாபாத்திரங்களில் நடித்துவிட முடியும். ஆனால், சீரியஸ் கதாபாத்திரம் நடிப்பவர்களால் நகைச்சுவை வேடங்களில் நடித்துவிட முடியாது. அது மிகவும் கடினமானது.” இவ்வாறு தெரிவித்தார்.