தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான ராம் கோபால் வர்மா, நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்தது குறித்து நெகிழ்ச்சியாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கோலிவுட்டில் கதாநாயகனாக, வில்லனாக பல்வேறு பரிமாணங்களில் நடித்து வலம் வந்த விஜய் சேதுபதி தெலுங்கு, இந்தியிலும் தனது நடிப்பால் கவனம் ஈர்த்து தொடர்ச்சியாகப் பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, சமீபத்தில் பாலிவுட்டில் அவர் நடித்த ஃபார்ஸி இணைய தொடர், மேரி கிறிஸ்துமஸ் திரைப்படம் விஜய்சேதுபதிக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளன. இந்நிலையில் அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து வித்தியாசமான படங்களை இயக்கிய, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான ராம் கோபால் வர்மா, திடீரென நடிகர் விஜய் சேதுபதியை சென்னையில் இருக்கும் அவரது அலுவலகத்திற்குச் சென்று சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராம் கோபால் வர்மா, “விஜய் சேதுபதியை பல முறை திரையில் பார்த்து வியந்திருக்கிறேன். இப்போது தான் அவரை நேரில் பார்த்து அவருடன் பேசினேன். திரையில் பார்த்ததைவிடவும் நேரில் அவர் இன்னும் சிறந்த மனிதராக இருக்கிறார்” என்று நெகிழ்ந்துள்ளார்.