கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஒற்றை யானை விரட்டியதில் கீழே விழுந்து காவலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மருதமலை அடிவாரப் பகுதியில் பாரதியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. உணவுக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி. காலனி, கல்வீரம்பாளையம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிவது வழக்கம். இந்நிலையில் சோமையாம்பாளையம், மருதமலை அடிவார பகுதியில் இருந்து மே 22 இரவு 13 யானைகள் வனத்தை விட்டு வெளியேறின.
தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு முன்னதாக அந்த யானைகளை வனத்துறையினர் வனப் பகுதிக்குள் விரட்டி விட்டனர். இந்நிலையில், பாரதியார் பல்கலைகழக பகுதியில்இன்று (மே 23) காலை ஒற்றை யானை ஒன்று முகாமிட்டிருந்தது. அந்த யானை பல்கலைக்கழகத்தின் பின்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை குடிக்க வந்தது. அப்போது பல்கலைக்கழகத்தில் இருந்த காவலாளிகள் இருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யானையை விரட்டினர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த ஒற்றை யானை, காவலாளிகளை நோக்கி ஓடி வந்தது. இதனால் பதற்றம் அடைந்த காவலாளிகள் இருவரும் ஓடினர். அப்போது சண்முகம் (57) என்ற காவலாளி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.