“இனி நண்பர்களாக பணியாற்றுவோம்” என்று இருதுறையினரும் உறுதி
காவல்துறை-போக்குவரத்துத் துறை இடையே ஏற்பட்ட பிரச்சினைக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவுரையின் பேரில் தீர்வு ஏற்பட்டது. “இனி நண்பர்களாக பணியாற்றுவோம்” என்று இருதுறையினரும் உறுதி அளித்தனர்.
நாங்குநேரியில் பேருந்து நடத்துநருக்கும், காவலர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக போக்குவரத்து துறைக்கும், காவல்துறைக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வந்தது.
நாங்குநேரியில் மோதல்
அதாவது, திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் நாங்குநேரி பேருந்து நிறுத்தத்தில் ஆறுமுகப்பாண்டி எனும் காவலர் ஏறியுள்ளார். அவரிடம் டிக்கெட் எடுக்கும்படி நடத்துநர் கேட்டுள்ளார்.
அப்போது அரசுப் பேருந்தில் அரசுப் பணியில் உள்ளவர்கள் எவரும் பணி நிமித்தமாக பயணிக்கும்போது டிக்கெட் எடுக்கத் தேவையில்லை. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கு டிக்கெட் கிடையாது என்று காவலர் ஆறுமுகப்பாண்டியன் தகராறில் ஈடுபட்டார்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. அரசு பேருந்தில் காவலர்கள் டிக்கெட் எடுக்க வேண்டுமா.. வேண்டாமா.. என்று சர்ச்சை எழுந்த நிலையில், அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் டிக்கெட் எடுத்துதான் பயணிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தியது.
காவல்துறை எதிர்நடவடிக்கை
இந்த சம்பவம் எதிரொலியாக, ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியவில்லை, போக்குவரத்து விதியை சரியாக கடைபிடிக்கவில்லை, சீருடை சரியாக அணியவில்லை என்று கூறி ஆங்காங்கே அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு காவல்துறை அபராதம் விதித்து வந்தது.
இதன் மூலம் போக்குவரத்துதுறை, காவல்துறை இடையே உரசல் ஏற்பட்டது.
இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் காவல் துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வுகாண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
அதன் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்து செயலாளர் பணிந்தீரரெட்டி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து ஊழியர்கள் – போலீசார் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.
வருத்தம் தெரிவித்தனர்
அதன்படி, டிக்கெட் எடுப்பதில் மோதலில் ஈடுபட்ட அரசு பஸ் நடத்துநரும் காவலரும் சமரசம் செய்துகொண்டனர்.
காவலரும் நடத்துநரும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து ஆரத்தழுவி கட்டியணைத்து சமரசம் செய்துகொண்டனர்.
பின்னர், போக்குவரத்து, போலீஸ் ஆகிய 2 துறைகளும் இனி நண்பர்களாக பணியாற்றுவோம் என்று இருவரும் உறுதியளித்தனர். பின்னர், இருவரும் ஒன்றாக டீ குடித்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் விதிகளை மீறி செயல்பட்டதாக அரசு பஸ்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு தொடர்ந்து அபராதம் விதித்து வந்த நிலையில் அந்த நடவடிக்கையும் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
–