வங்க கடலில் உருவாகியுள்ள ரெமல் புயல் காரணமாக, ஏர் இந்தியா விமான நிறுவனம் அந்தமானுக்கு இயக்கப்படும் விமான சேவைகளை, இன்று ஒரு நாள், முழுவதுமாக ரத்து செய்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து காலை 5.05 மணிக்கு புறப்பட்டு, காலை 7.15 மணிக்கு அந்தமான் போய் சேர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், அதைப்போல் 7.55 மணிக்கு அந்தமானில் இருந்து புறப்பட்டு, காலை 10.20 மணிக்கு, சென்னை வந்து சேர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஆகிய 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல அந்தமானுக்கு, கொல்கத்தாவில் இருந்து செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், விசாகப்பட்டினத்தில் இருந்து செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், அதைப்போல் அந்தமானில் இருந்து கொல்கத்தா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் மண்டலம் ரெமல் புயலாக வலுப்பெறுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.