பாகிஸ்தானில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தப்படி இருந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சில பகுதிகளில் 122 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில் வெப்பம் தொடர்ந்து உயர்ந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான சிந்துவில் 126 டிகிரி வெயில் பதிவானது. சிந்துவில் உள்ள மொஹென்ஜோ டாரோவில், கடந்த 24 மணி நேரத்தில் 126 டிகிரி வெப்பநிலையாக உயர்ந்துள்ளது என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த கோடை காலத்தில் அதிகபட்ச டிகிரி இதுவாகும்.
வெயில் கொளுத்துவதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். பகல் நேரத்தில் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். வெயிலின் தாக்கத்தால் பலர் உடல்நல பாதிப்புகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெயில் காரணமாக பஞ்சாப் மத்திய மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிந்து மாகாணத்தில் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையத்தின் தலைமை வானிலை ஆய்வாளர் சர்தார் சர்பராஸ் கூறும்போது, நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்தப்படி இருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள டர்பட் நகரில் 129.2 டிகிரி வெயில் பதிவானதே அதிகபட்சமாகும். இது ஆசியாவிலேயே இரண்டாவது மற்றும் உலகின் நான்காவது அதிக வெப்ப பதிவாகும் என்றார்.