கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அருகே குமரம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் உஸ்மான். இவருடைய மனைவி ரம்லத்(வயது 42). ஹோமியோபதி டாக்டர். அவர்களது வீட்டில் நாய் வளர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாயின் நகத்தால் ரம்லத்தின் உடலில் லேசான காயம் ஏற்பட்டது.
சிறிய காயம் தானே என்று கருதி அதை கண்டு கொள்ளவில்லை. அதற்காக எந்தவிதமான சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கிடையே சில நாட்களுக்குப் பிறகு நாய் செத்தது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ரம்லத்துக்கும், கணவர் உஸ்மானுக்கும் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 2 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 2 பேரும் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்தனர். ஆனால், 2 பேரும் டாக்டரிடம் சொல்லாமல் வீட்டுக்கு சென்று விட்டனர். அதன் பிறகு ரம்லத்தின் உடல்நிலை மோசமானது. மே 27அன்று வீட்டில் வைத்தே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அறிந்ததும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் நாயின் நகம் பட்டு தான் மரணம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கவனமாக இருக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.