பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) மாலை 3.50 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அவர் வரும் ஹெலிகாப்டர் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள தளத்தில் வந்து இறங்குகிறது. அங்கு அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தேனீர் அருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பிறகு மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறார். பின்னர் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் பாறைக்கு தனிப்படகில் செல்கிறார். அங்கு உள்ள தியான மண்டபத்தில் இன்று மாலை முதல் 1-ந் தேதி மாலை வரை 3 நாட்கள் தரையில் அமர்ந்து தியானம் செய்கிறார்.
பின்னர் 1-ந்தேதி மாலை படகில் கரைக்கு திரும்புகிறார். பின்னர் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்கிறார். பிரதமர் மோடி கன்னியாகுமரியில் வந்து இறங்கும் ஹெலிகாப்டர் தளத்தில் இன்று முதலே துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் தளம் அமைந்து உள்ள பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் விவேகானந்தர் மண்டபத்துக்கு பிரதமர் மோடி செல்லும் பாதையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.