ரிமல் புயல் கரையைக் கடந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த மே 25ம் தேதி மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியது. ‘ரிமல்’ என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கடந்த 26ம் தேதி இரவு 8.30 மணியளவில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 135 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இந்நிலையில், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ரிமல்’ புயல் கரையை கடந்த பின்னரும் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கான ரெட் அலர்டை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தன்படி, அசாம், மேற்கு வங்கம், திரிபுரா, மிசோரம், மேகாலயா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் சூறாவளிகாற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், மரங்கள், மின் கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்து விழுந்தன. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வீடுகள், விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை கரணமாக அம்மாநில முதலமைச்சர் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.