அடிக்கடி ஆன்மீகப் பயணம் சென்று வருவது புத்துணர்ச்சி அளிக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை புறப்பட்டார். கேதர்நாத் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்வதற்காக சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து இமயமலை புறப்பட்டார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: “இப்போது ஒவ்வொரு ஆண்டும் இமயமலை செல்கிறேன். கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் தரிசனம் செய்ய உள்ளேன். ஆன்மீகப் பயணம் அடிக்கடி சென்று வருவது புத்துணர்ச்சி அளிக்கிறது. ‘வேட்டையன்’ திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது” என்று தெரிவித்தார். அப்போது மீண்டும் மோடி வெற்றிபெறுவார் என்று நினைக்கிறீர்களா என்று ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “மன்னிக்கவும், அரசியல் கேள்வி வேண்டாம்” வேண்டாம் என்று கூறினார். தொடர்ந்து இசை பெரியதா அல்லது கவிதை பெரியதா என ஒரு போட்டி தமிழ் சினிமாவில் எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு, பதில் கூறாமல் சென்றுவிட்டார்.
![“அடிக்கடி ஆன்மீகப் பயணம் சென்று வருவது புத்துணர்ச்சி அளிக்கிறது” – நடிகர் ரஜினிகாந்த்!](https://uthayannews.ca/wp-content/uploads/2024/05/Acter-Rajinikanth.jpg)