நடராசா லோகதயாளன்
யாழ்ப்பாணம் மாவட்டத்திறகான நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான நிதி ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ள போதும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரில் யாழ்ப்பாணத்திற்கு 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
வியாழக்கிழமை (30) அன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலேயே இந்த சர்ச்சை வெடித்தது.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சாள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே இவ் விடயம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு வெகுமதி ஆசணப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமாக 8 பேர் உள்ளனர். இதில் டக்ளஸ் தேவானந்தா, த.சித்தார்த்தன், சி.சிறிதரன் ஆகிய மூவருக்கு மட்டும் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இவற்றை சுட்டிக் காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் போன்றோர் இது வேண்டுமென்றே புறக்கணிக்கப்படும் செயல்பாடாக உள்ளது என்று குரல் எழுப்பினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் பரிந்துரையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 திட்டங்களிற்கு 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பெயரில் அத்திட்டங்களை நடைமுறைப்படுத்த ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கோரப்பட்ட சமயமே சர்ச்சை ஏற்பட்டபோது. அவ்வாறானால் அத்திட்டங்களை அனுமதிக்க முடயாது என தீர்மானிக்கவா என ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரினார்.
“எமது மாவட்டத்தில் எமது மக்களின் அபவிருத்திக்காக வந்த பணத்தை திருப்பி விட விரும்பாத காரணத்தினால் அதனை அனுமதிக்கின்றோம். இதே நேரம் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரான நீங்கள் கூறிய கால அவகாசத்தில் நாமும் எமது திட்டங்களை மாவட்டச் செயலகத்தில் கையளித்தோம் இருந்தும் எமது திட்டங்கள் மட்டும் அனுமதிக்கப்படவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைகளை சமர்ப்பித்த மறுநாளே அவற்றை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி அதன் பிரதியை உரிய நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் அனுப்பி வைத்தோம் என மாவட்டத்தின் கடமை நிறைவேற்று அரச அதிபர் ம.பிரதீபன் தெரிவித்தார்.