இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 7 மாதங்களை கடந்து தீவிரமாக நடந்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகி விட்ட நிலையில், ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டையாக கருதப்படும் ரபா நகரில் இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தீவிரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி ரபா நகரில் இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக ரபா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 60-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் ரபா நகரில் தரைவழி தாக்குதலில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் வீரர்கள் 3 பேர் கண்ணி வெடியில் சிக்கி பலியானதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.