இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் கிங்ஸ்லேண்ட் ஹை ஸ்ட்ரீட் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தின்போது அந்த பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த 9 வயது சிறுமி உள்பட 4 பேர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறை, படுகாயமடைந்த 4 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியின் பெயர் லிசெல் மரியா என்றும், அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த அஜீஷ்-வினயா தம்பதியின் மகள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் 26, 37 மற்றும் 42 வயதான 3 ஆண்கள் படுகாயமடைந்த நிலையில், அவர்களது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல் அதிகாரி ஜேம்ஸ் கான்வாய் கூறுகையில், “உணவகத்தில் தனது குடும்பத்தினருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த 9 வயது சிறுமி, துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.