“ஜூன் 4 இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி வெற்றியின் முகட்டில் நிற்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: “பாஜக வின் பத்தண்டுகால ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற எண்ணத்தில் இருக்கும் பாஜகவுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணிதிரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது.
தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பாஜக உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக சார்பில் பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். பா.ஜ.க. வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!” இவ்வாறு தனது சமூக வலைதள பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.