“தமிழ் மொழியை பாதுகாத்த மாபெரும் தலைவருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்திய பின் ராகுல் காந்தி தெரிவித்தார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரின் நினைவிடத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோல முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு டில்லியில் அண்ணா கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, பி.வில்சன், கனிமொழி சோமு, சண்முகம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளார் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளார் சீதாராம் யெச்சூரி, சாமாஜ்வாதி கட்சி எம்.பி ராம்கோபால் யாதவ் உள்ளிட்டோர் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் பேசிய ராகுல் காந்தி “தமிழ் மொழியை பாதுகாத்த, கலாச்சாரத்தை உயர்த்தி பிடித்த மாபெரும் தலைவருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன்” என தெரிவித்தார்.