பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி ஆகியன தங்களுடைய கூட்டணி கட்சிகளின் தலைவர்களை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டில்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் மாலை 4 மணிக்கு நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, பீகார் முதல்-அமைச்சர் மற்றும் ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் டில்லிக்கு புறப்பட்டு சென்றார். இதேபோன்று முன்னாள் துணை முதல்-அமைச்சர் மற்றும் ராஷ்டீரிய ஜனதாதள கட்சியின் தலைவரான தேஜஸ்வி யாதவ், இந்தியா கூட்டணி சார்பிலான கூட்டத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றார். இதில், ஆச்சரியமளிக்கும் வகையில் நிதீஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். அப்போது, ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். நிதீஷ் குமார், இதற்கு முன் மகாகட்பந்தன் எனப்படும் ராஷ்டீரிய ஜனதாதள கட்சியுடனான கூட்டணியில் இடம் பெற்றிருந்தபோது, அவர் முதல்-மந்திரியாகவும், தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி வகித்தனர். இதன்பின் கூட்டணியை முறித்து கொண்டு நிதீஷ் குமார் வெளியேறி, பா.ஜ.க.வுடன் கைகோர்த்து மீண்டும் பீகாரில் ஆட்சியமைத்து உள்ளார். பெரும்பான்மையை பெற பா.ஜ.க. தவறிய நிலையில், நிதீஷ் குமார் மற்றும் தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் மத்தியில் ஆட்சியமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பவராக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
![நிதீஷ் குமார், தேஜஸ்வி யாதவ் இருவரும் ஒரே விமானத்தில் பயணம்](https://uthayannews.ca/wp-content/uploads/2024/06/Nitish-kumar-tejashwi-yadav-same-flight.jpg)