நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்க ராகுலை காங்கிரஸ் செயற்குழு வலியுறுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டில்லியில், கார்கே தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டம் முடிந்த பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என ராகுலை காங்கிரஸ் செயற்குழு ஒரு மனதாக கேட்டுக் கொண்டுள்ளது. நாடாளுமன்றத்திற்குள்ளும் கட்சியை வழிநடத்த அவர் தான் சிறந்த நபர். இந்த விவகாரத்தில் விரைவில் முடிவு எடுப்பதாக ராகுல் கூறியுள்ளார். வயநாடு அல்லது ரேபரேலி தொகுதிகளில் ராகுல் வெற்றி பெற்றுள்ளார். அதில் ஏதாவது ஒரு தொகுதியை ராஜினாமா செய்வது குறித்து 17 க்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும். 3 அல்லது 4 நாட்களில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.