நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி, கேரள மாநிலம் வயநாட்டில் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டிலுமே அபார வெற்றி பெற்றார்.
ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் ஒரு தொகுதியை கட்டாயமாக ராஜினாமா செய்தாக வேண்டும். இதன் பின்னர் ராகுல் காந்தி ராஜினாமா செய்த தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் நடத்தும்.
இந்த நிலையில் ரேபரேலி தொகுதிக்குச் சென்று அங்கு தன்னை வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து இன்று (ஜூன் 12) வயநாடு சென்று தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, ராகுல் காந்தி முதல் முறையாக நேற்று வயநாடு வந்தார். எடவண்ணா பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டு நின்று ராகுலுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். அங்கு பேசிய ராகுல் காந்தி தெரிவித்ததாவது..
வயநாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் நான் என் மனதில் இருந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். சிறுவயதில் என் அம்மாவும், பாட்டியும் கதகளி நாட்டியம் பார்ப்பதற்காக என்னை அழைத்துச் சென்று இருக்கிறார்கள். அப்போது எனக்கு அது குறித்து எதுவுமே புரியவில்லை ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் கதகளி நாட்டியத்தை பார்த்தேன் அப்போது அது குறித்த விளக்கங்களை எனக்கு சொன்னார்கள்
மூன்று மணி நேரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை இந்த நாட்டியத்தில் கேரள மக்களின் வரலாறு பண்பாடு கலாச்சாரம் என அனைத்தையும் ஒரு சேர நான் கண்டேன். அரசியல் அதிகாரம், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை கொண்டு தாங்கள் என்ன நினைக்கிறோமோ அதை மக்களிடம் புகுத்தி விட வேண்டும் என பாஜக திட்டமிட்டது
ஆனால் இந்திய மக்கள் எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என தேர்தல் முடிவுகள் மூலமாக கூறியிருக்கிறார்கள். இந்திய அரசியல் சாசனம் என்பது மக்களின் குரல் அந்த குரலை யாராலும் நசுக்க முடியாது என்பதை இந்திய வாக்காளர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
உங்கள் பேராதரவுடன் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நான், “வயநாடா..? ரேபரேலியா..? எந்த தொகுதியை ராஜினாமா செய்வது என்பது குறித்து இன்னும் குழப்பத்தில்தான் இருக்கிறேன். எனக்கு கடவுள் மக்களாகிய நீங்கள் தான். எனவே எதை ராஜினாமா செய்வதாக இருந்தாலும், உனக்களிடம் கேட்டுத் தான் முடிவு செய்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.