ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையிலேயே முன்னாள் ஆளுநர்
தமிழிசையை அமைச்சர் அமித்ஷா கை விரலை உயர்த்தி கடுமையான முகத்துடன் கண்டித்தார். இச்சம்பவத்தைக் கண்டித்து கேரளா காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கான ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். இந்த பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அத்துடன் தமிழக பா.ஜ.க.தலைவர்
அண்ணாமலையையும் வெளிப்படையாகவே தமிழிசை விமர்சித்தார்.இதற்கு அண்ணாமலை தரப்பும் பதில் கொடுத்தது. இந்நிலையில் விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழிசை, விழா மேடையில் அமித்ஷா மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு
நகர்ந்தார். ஆனால் அமித்ஷாவோ, தமிழிசையை அழைத்தார். அப்போது, கடுமையான முகத்துடன் கை விரல்களை உயர்த்தி கண்டிப்புடன் தமிழிசையிடம் பேசினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழிசையும் அமித்ஷாவிடம் பேசினார். இதுதொடர்பான காணொளி
சமூக வலைதளங்களில் பரவியது. ஒரு பெண்ணை, முன்னாள் ஆளுநரை பொதுமேடையில் எப்படி அமித்ஷா கண்டிக்கலாம்? என்பது விமர்சனம் வைப்போரின் கருதாகும். தற்போது இந்த விவகாரத்தில் கேரளா காங்கிரஸும் இணைந்துள்ளது. கேரளா காங்கிரஸ் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், பெண்களை பாஜக எப்படி இழிவாக நடத்துகிறது என்பதற்கு இதுதான் சான்று. கொஞ்சமாவது சுயமரியாதை இருந்தால் தக்க பதிலடி கொடுத்துவிட்டு பாஜகவில் இருந்து விலகியிருப்பார்கள். ஒரு மருத்துவர், முன்னாள் ஆளுநரான தமிழிசை இத்தகைய அவமானங்களை தாங்கிக் கொள்ளக் கூடாது. உடனே பாஜகவில் இருந்து விலக வேண்டும்” என தெரிவித்துள்ளது.