கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு குவைத்தில் சொந்தமான நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் தங்கியிருந்த குடியிருப்பில், திடீர் தீ விபத்து
ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் பலர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் தீக்காயமடைந்தவர்கள் அதான், ஜாபர் மற்றும் முபாரக் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தரைத்தளத்தில் தீப்பற்றியதைக் கண்டு பலர் உயிர் பிழைக்க மேல் தளத்தில் இருந்து கீழே குதித்துள்ளனர். இந்நிலையில், இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்தவர்களில் அடக்கம். இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது கீச்சகப்
பக்கத்தில், குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. என்று கூறியுள்ளார்.