லாந்தர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய எம்.எஸ்.பாஸ்கரின் கருத்துக்கள் சினிமா ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது. ‘நான் பொதுமக்களுக்கு சொல்வது ஒன்றுதான். உங்களுக்கு படம் பிடித்தால் நாலு பேரிடம் சொல்லுங்கள். பிடிக்கவில்லை என்றால் அதை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள். படம் பார்க்க போறவர்களிடம், அந்தப் படம் நல்லா இல்லை பார்க்க போகாதீர்கள் என்று கூறாதீர்கள். ஒரு படம் எடுப்பதில் எத்தனை பேருடைய உழைப்பு இருக்கிறது. எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும். படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு எத்தனையோ பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இது மாதிரி பல கஷ்டங்கள் உள்ளன. அதுபோல எடுக்கப்படும் படங்களை செல்ஃபோன் கையில் இருக்கும் ஒரே காரணத்தினால், தியேட்டரில் உட்கார்ந்து கொண்டு படம் மொக்க என பதிவிடுகிறார்கள்.
தயவு செய்து இந்தப்படத்துக்கு வந்துவிடாதீர்கள் என்று சொல்லாதீர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பேசாமல் இருங்கள். எல்லோரும் பார்க்கட்டும். படங்களை பார்க்க செலவளிக்கும் 120, 200 ரூபாயில் மாட மாளிகைகள், கோபுரங்கள் கட்டிவிடப் போவதில்லை. நல்லா இருக்கும் படத்துக்கும் சரி, நல்லா இல்லாத படத்துக்கும் சரி நிறைய பேர் வந்து பார்த்தால், பல குடும்பங்கள் வாழும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.” என்று பேசியுள்ளார். அதாவது இவரது கூற்றுப்படி, செல்ஃபோன் கையில் வைத்து விமர்சனங்கள் பதிவிடுவது குறித்து பேசியது வரை ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றுதான். ஏனெனில், இந்த விமர்சனங்களால் எவ்வளவோ நல்ல படங்களை நாம் மிஸ் செய்தது உண்டு.
ஆனால், எம்.எஸ்.பாஸ்கர் கூறிய 120, 200 ரூபாயில் மாட மாளிகைகள், கோபுரங்கள் கட்டிவிடப் போவதில்லை என்ற வார்த்தைகள்தான் யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.