கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரியில் நேற்று (ஜூன் 14) நள்ளிரவுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூன் 15) அதிகாலையிலேயே 350 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்பதால் மீன் சந்தை களைகட்டத் தொடங்கி உள்ளது.
கடலில் வசிக்கும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்படுகிறது. இந்த தடைக்காலத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
அதேபோல் இந்த ஆண்டிலும் கடந்த ஏப்ரல் 15 ம் தேதி மீன்பிடி தடைகாலம் தொடங்கியது. இதனால் கன்னியாகுமரி அருகே சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. கரையோரத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்தன.
இருப்பினும் நாட்டுப்புற படகு, வள்ளம் போன்றவற்றிற்கு மீன்பிடிக்க தடை இல்லாததால் அவர்கள் மட்டும் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இருப்பினும் ஆழ்கடலில் தான் சீலா, வஞ்சிரம், நெய் மீன் உள்ளிட்ட உயர்தர மீன்கள் கிடைக்கும்.
ஆனால், விசைப்படகுகள் செல்லாததால் அந்த மீன்களும் கிடைக்கவில்லை. இதனால் சின்ன முட்டத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மின்சந்தை வெறிச் சோடி காணப்பட்டது. மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்கள் தங்களின் வலைகளை பழுது பார்ப்பது, விசைப்படகுகளுக்கு வர்ணம் பூசுதல் மற்றும் பழுது இருந்தால் சரி செய்வது உள்ளிட்ட பணிகள் செய்து வந்தனர்.
இந்த நிலையில் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14 நள்ளிரவுடன் முடிவடைந்தது. இதையடுத்து கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 350-க்கும் மேற்பட்ட
விசைப் படகுகள் இன்று (ஜூன் 15)அதிகாலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றன. அவர்கள் கரை திரும்பும்போது அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்பதால் மீன் சந்தை களைகட்டத் தொடங்கி உள்ளது.