தென்னிந்தியாவில் சமீபத்தில் பெரும் வெற்றி பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் கருப்பு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான சவுபின்
ஷாகிரிடம் ஒன்றிய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி நிபந்தனையும் விதித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளம் , தமிழ்நாடு, கர்நாடகம் உள்பட தென்னிந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன மலையாள படம் மஞ்சும்மல் பாய்ஸ் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ. 250 கோடியை தாண்டியது. தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்த இந்த படம் மலையாளத்தில் முதன்முதலில் 200 கோடியை தாண்டிய படம் என்ற சாதனையையும் படைத்தது.
இதில் கதாநாயகனாக நடித்த சவுபின் ஷாகிர் இந்த படத்தின் முக்கிய தயாரிப்பாளர் ஆவார். மேலும், இவருடைய தந்தை பாபு ஷாகிர், ஷான் ஆண்டனி ஆகியோரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த சிராஜ் என்பவர் மஞ்சும்மல் படத்தில் தான் 7 கோடி முதலீடு செய்ததாகவும், படத்தில் பெரும் லாபம் கிடைத்த பிறகும் ஒப்பந்தம் செய்து கொண்டபடி பங்குத்தொகை எதுவும் தரவில்லை என்றும் கூறி போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து கொச்சி மரடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். சிராஜ் தவிர மேலும் பலர் இந்த படத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கும் பணம் எதுவும் கொடுக்க வில்லையாம். இதையடுத்து அவர்களும் போலீசில் புகார் செய்தனர்.
இதற்கிடையே இந்த படத்தில் கருப்பு பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய அமலாக்கத் துறைக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த படத்தின் வினியோகஸ்தரான சுஜித், தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி ஆகியோரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணை தொடருகிறது.
இந்த நிலையில் நடிகர் சவுபின் ஷாகிரிடமும் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் கருப்பு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து அவரிடம் தகவல்கள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பல மணி நேர விசாரணைக்கு பின் அவரை அமலாக்கத் துறையினர் விடுவித்தனர். மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சவுபின் ஷாகிரிடம் ம் அமலாக்கத் துறையினர் நிபந்தனையையும் விதித்தனர்.