பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்கள் தமிழகத்தில் இருந்து வெளியேறி ஆந்திராவில் தஞ்சம் கேட்க முடிவு செய்துள்ளதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் ஏற்கனவே இயங்கி வரும் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த போதுமான இடவசதி இல்லாததன் காரணமாக, சென்னையில் இருந்து சுமார் 57 கிமீ தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே ரூ.20,000 கோடி முதலீட்டில் 5,000 ஏக்கர் பரப்பளவில், பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய க்ரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசு நில எடுப்புக்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. இதனிடையே, பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதால் விவசாயம் பாதிப்படையும் எனவும், தங்கள் வாழ்வாதாரம், எதிர்காலம் கேள்விக்குறியாகும் என கூறி எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் 2028-ம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்கும் வகையில் பணிகளை தீவிரப்படுத்தியிருக்கும் மத்திய, மாநில அரசுகள் பரந்தூர், ஏகனாபுரம், வளத்தூர், பொடவூர், மடப்புரம், தண்டலம், நல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் நில அளவீடு பணிகளை செய்து வருகின்றன. மேலும் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் வருவாய்த்துறை ஈடுபட்டு வருகிறது. விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 650 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் கிராம மக்கள், கிராம சபை கூட்டங்களில் தீர்மான நிறைவேற்றுவது உட்பட பல்வேறு வகையிலான போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
தற்போது தமிழகத்தில் இருந்து வெளியேற இருப்பதாக அறிவித்துள்ள இக்கிராம மக்கள், ஆந்திராவில் தஞ்சம் கேட்க முடிவு செய்திருப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏகனாபுரம் கிராம மக்கள், நிலம் எடுப்பதற்கு அரசு தொடர்ந்து அறிவிப்பை வெளியிட்டு வருவதால் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி ஆந்திர மாநிலத்தில் தஞ்சமடைய உள்ளதாக அதிரடி முடிவு எடுத்திருப்பதாக கூறியுள்ளனர். மேலும், ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தஞ்சம் கேட்க கிராம மக்கள் முடிவு செய்திருக்கின்றனர்.