ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டின் முன்புறத்தை அதிகாரிகள் இடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மிக மோசமான தோல்வியைப் பதிவு செய்தது. இந்தத் தேர்தலில் வெறும் 11 இடங்களில் மட்டுமே அவர்களால் வெல்ல முடிந்தது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது மட்டுமின்றி 11 சீட்களில் மட்டுமே வென்று மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டது. இதற்கிடையே இப்போது ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டின் முன்புறம் இடிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா முன்னாள் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான இல்லம் ஒன்று தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள லோடஸ் பாண்ட் பகுதியில் அமைந்துள்ளது. அவரது வீட்டின் முன்புறம் ஒரு பகுதி நடைபாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. அதாவது ஜெகனின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்கம் அறை நடைபாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது என்பதே புகாராகும்.
இந்தச் சூழலில் கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் அந்த சட்டவிரோத கட்டிடங்களை இடித்து அகற்றினர். பாதுகாப்பு அதிகாரிகள் தங்கும் அந்த அறை சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாகவும் இது பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. அப்பகுதி மக்கள் இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்த நிலையில், ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் விளக்கமளித்தனர். மேலும், ஆக்கிரமிப்பு அறை இடிக்கப்பட்டுள்ள நிலையில், இனிமேல் அப்பகுதி மக்களால் நடைபாதையை ஈஸியாக பயன்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது. போலீஸ் துணையுடன் அங்கு சென்ற அதிகாரிகள் ஆக்கிரமிப்பை இடித்துள்ளனர். அப்போது ஜெகன் கட்சியினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை அப்பகுதி மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதை அரசியல் பழிவாங்கல் என்றும் சந்திரபாபு நாயுடு தந்த அழுத்தம் காரணமாக இந்த நடவடிக்கையை ஹைதராபாத் அதிகாரிகள் எடுத்துள்ளதாகவும் சாடியுள்ளனர்.