அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைமைதான் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: அதிமுகவில் ஒரு சாதி ஆதிக்கம் செலுத்துவதாக சசிகலா எப்படி சொல்கிறார். அதிமுகவில் சாதிக்கு இடம் கிடையாது. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. 2021-ல் அரசியலில் இருந்து ஓய்வு என கூறிய சசிகலா இப்போது ஏன் வருகிறார். அதிமுகவை காப்பாற்றுவேன் என சசிகலா கூறுவது, 3 ஆண்டுகள் வேலைக்கு செல்லாமல் திடீரென வேலைக்கு செல்வதுபோல் உள்ளது. இத்தனை நாட்களாக அதிமுகவை காப்பாற்றியது தொண்டர்கள். அதிமுகவில் எந்த சரிவும் இல்லை; தோல்வியை சந்திக்காத அரசியல் கட்சி எது?. இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தை எப்படி கட்சியில் மீண்டும் சேர்க்க முடியும். மத்திய அமைச்சர் ஆகலாம் என்ற சுயநலத்தில் பாஜகவில் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டார்; ஆனால் அவருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். அதிமுகவிற்கு எப்போதுமே விசுவாசம் இல்லாத நபர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைமைதான் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.