திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் 8,373 ஏக்கரில் அமைந்துள்ளது, மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்.
இதனை நிர்வகித்து வரும் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (பிபிடிசி) 6 தலைமுறைகளாக பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது.
இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 99 ஆண்டு கால குத்தகை 2028-ம் ஆண்டுதான் முடிவடைகிறது. அதற்குள் 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தேயிலைத் தோட்ட தொழிலாளர்களிடம் விருப்ப ஓய்வு என்ற அடிப்படையில் கட்டாயமாக கையெழுத்துப் பெற்று வெளியேற்ற முயற்சி நடக்கிறது.
அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் நிவாரண தொகையுடன் கூடிய விருப்ப ஓய்வு பெறலாம் என அந்த நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் பலர் விருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில், மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் குத்தகை காலம் முடிவதற்கு முன்பாகவே தங்களை வெளியேறச் சொல்வதாகவும், 4 தலைமுறைகளாக அதே பகுதியில் வசித்து வரும் சூழலில், தற்போது வெளியேறச் சொல்வதால் செய்வதறியாது தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு போன்றவற்றை செய்து தர உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அவர்களை அங்கிருந்து வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நாளை மறுநாள்(அதாவது நாளை) உரிய விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.