தூத்துக்குடியில் ரூ.24 கோடி மதிப்புள்ள ஐஸ் கேட்டமைன் என்ற போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்ததாக கணவன், மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் ஒரு வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி மதுவிலக்கு டிஎஸ்பி செந்தில் இளந்தரையன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மேகா, தூத்துக்குடி நகர தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர சோதனையிட்டனர்.
அப்போது இனிகோ நகர் பகுதியில் ஒரு வீட்டில் ஐஸ் கிறிஸ்டைல் மெத்தம் பெட்டாமைன் என்ற போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர். விசாரணையில் வீட்டில் இருந்த மட்டக்கடையை சேர்ந்த தாமஸ் மகன் நிர்மல் ராஜ் என்ற நிர்மல் (29 ), அவருடைய மனைவி சிவானி (28) ஆகியோர் போதைப் பொருளை பதுக்கியது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த 8 கிலோ போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.24 கோடி என கூறப்படுகிறது. தொடர்ந்து கணவன்-மனைவி இருவரையும் போலீசார் கைது செய்து, தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். குறித்து இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.