நடிகர் விஜய் பிறந்தநாளை ஒட்டி சென்னை நீலாங்கரையில் அவரது ரசிகர்கள் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் பல்வேறு சாகசங்கள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, சிறுவன் ஒருவர் கையில் தீ பற்ற வைத்து ஓடு உடைக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது. அதற்காக ஏற்பாடுகள் தயாராக இருந்த நிலையில், சிறுவன் கையில் தீப்பற்ற வைத்து ஓட்டை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் கை முழுவதும் தீ பரவியது. உடனடியாக தீயை அணைக்க முயன்ற அருகில் இருந்தவர் தண்ணீர் என நினைத்து பெட்ரோலை எடுத்து அச்சிறுவன் மீது ஊற்றினார். இதனால் தீ மளமளவென பரவியது. அருகில் இருந்தவர்கள் சிறுவனின் மேல் பரவிய தீயை அணைத்து, அச்சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியது.