கேரளாவில் கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சேலக்கரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்
கே. ராதாகிருஷ்ணன் தொடர்ந்து பினராயி விஜயன் மந்திரி சபையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தேவசம்போர்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அனைவரிடமும் எளிமையாக பழகக் கூடியவர். இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் ஆலத்தூர் தொகுதியில் இடதுசாரி கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகளில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டது. அதன்படி வெற்றி பெற்றார். கடந்த மக்களவைத் தேர்தலில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் மட்டுமே இடதுசாரி கூட்டணி சார்பில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எம்.பி ஆனதை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் அமைச்சர், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணனை சந்திப்பதற்காக பத்தனம் திட்டா மாவட்ட முன்னாள் கலெக்டரும், விழிஞ்ஞம் துறைமுக இயக்குநருமான டாக்டர் எஸ். திவ்யா ஐயர் தனது கணவருடன் அவரது வீட்டுக்கு சென்றார். இப்போது அவரை திவ்யா ஐயர் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். அந்த போட்டோவை திவ்யா ஐயர் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். நிமிட நேரத்தில் இந்த போட்டோ வைரலாக பரவியது.
முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணனுக்கு கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்த திவ்யா ஐயருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.