800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தம்:
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்
24/06/2024)
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை அரசை கண்டித்தும், சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் 24-06-2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ஈடுபட்டனர்.
மீனவர்களின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகு மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 22-06-2024 அன்று சனிக்கிழமை காலை 507 மீன்பிடி விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
ஞாயிற்று கிழமை அதிகாலை மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஜஸ்டின், ரெயிமென்ட் மற்றும் கெரின் ஆகியோருக்கு சொந்தமான 3 மீன்பிடி விசைப் படகுகளையும் அதில் இருந்த சுரேஷ் பாபு, காளிதாஸ், ரூபின், கண்ணன், நாகராஜ் உள்ளிட்ட 22 மீனவர்களை கைது செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இதனை அடுத்து நேற்று ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க தலைவர்கள், மீனவர்கள் மற்றும் விசைப்படகின் உரிமையாளர்கள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
அந்த கூட்டத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்தும், சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சார்பு தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்ததால் ஒரு கோடி ரூபாய் அந்நிய செலவாணி பாதிக்கப்பட்டதுடன் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.