டில்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு ஜாமின் வழங்கியதற்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமின் உத்தரவை, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் வரை நிறுத்தி வைப்பதாக டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது. ஜாமின் நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையிலேயே உள்ளார். இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட ஜாமின் உத்தரவை டில்லி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
![கெஜ்ரிவால் ஜாமீன் தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு](https://uthayannews.ca/wp-content/uploads/2024/03/Kejriwal-issued-2nd-order-keeping-enforcement-department-in-custody.jpg)