கொரிய தீபகற்பத்தில் வடகொரியா – தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது. சமீப காலமாக பலூன்கள் மூலம் தென் கொரியாவிற்குள் குப்பைகளை வீசுகிறது. சிகரெட் துண்டுகள், வெற்று காகிதங்கள், கிழிந்த துணிகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற குப்பைகள் அடங்கிய ஏராளமான பலூன்களை தென்கொரியாவிற்குள் அனுப்பி உள்ளது. வடகொரியாவிற்கு எதிரான வாசகங்களுடன் தென்கொரியாவில் இருந்து வீசப்பட்ட காகிதங்களுக்கு பதிலடியாக இந்த பலூன்கள் வீசப்பட்டதாக வடகொரியா தெரிவித்திருந்தது. இந்நிலையில், வட கொரியாவில் இருந்து மீண்டும் குப்பை பலூன்கள் தென் கொரியா நோக்கி அனுப்பப்பட்டன. இந்த பலூன்களில் ஒரு பலூன், தென் கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முனையம் அருகே விமானங்கள் நிறுத்தப்படும் பகுதியில் விழுந்தது. மேலும் பல பலூன்கள் விமான நிலைய சுற்றுச்சுவர் அருகே பறந்துகொண்டிருந்தன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் மூடப்பட்டது.
![பறந்து விழுந்த குப்பை பலூன்... தென் கொரியா விமான நிலையத்தை மூடியது](https://uthayannews.ca/wp-content/uploads/2024/06/South-korean-airport-trash-balloons.jpg)